திருச்செந்தூர் கோவிலில் அரிசி மாவு பூசி உலா வந்த யானை

ஆடி சுவாதியை முன்னிட்டு, திருச்செந்தூர் கோவிலில் அரிசி மாவு பூசி வெள்ளை நிறத்தில் யானை உலா வந்தது.
திருச்செந்தூர் கோவிலில் அரிசி மாவு பூசி உலா வந்த யானை
Published on

திருச்செந்தூர்:

ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதனை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலையில் கோவில் யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு பூசி, வெள்ளை நிறத்தில் யானையும், தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.

பின்னர் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமானும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, வெள்ளை நிற யானையின் பின்னால் உள்பிரகாரத்தில் உலா வந்து மீண்டும் 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சுந்தரமூர்த்தி நாயனாரும், வெள்ளை நிற யானையும் ரத வீதியில் உலா செல்லாமல், கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக விழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com