மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

உதவி செய்வதுபோல் நடித்து மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்க சங்கலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
Published on

புதுச்சேரி

உதவி செய்வதுபோல் நடித்து மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்க சங்கலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் அரசு ஊழியர்

புதுவை சண்முகாபுரம் மாணிக்கசெட்டியார் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 48). இவர், தலைமை செயலகத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பாரில் மது குடித்துள்ளார்.

மதுகுடித்துவிட்டு வெளியே வந்த ராமநாதன் போதையில் தள்ளாடியபடி தவற விட்ட மோட்டார் சைக்கிள் சாவியை தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் உதவி செய்வதுபோல், ராமநாதனுடன் சேர்ந்து சாவியை தேடியுள்ளனர்.

ஒருவழியாக சாவியை கண்டு பிடித்து எடுத்த ராமநாதன் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்ல முயன்றார். அப்போது சாவியை தேடியவர்களில் ஒருவர், 'நீங்கள் அதிக போதையில் உள்ளதால் வண்டியை ஓட்டவேண்டாம். நானே ஓட்டிச்சென்று உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன்' என்று கூறி இருக்கிறார்.

சங்கிலி பறிப்பு

அதன்படி ராமநாதனை பின்னால் அமர வைத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளை அந்த வாலிபர் ஓட்டிச் சென்றார். அவர்களை பின் தொடர்ந்து மற்ற 2 பேரும் சென்றுள்ளனர். தமிழக பகுதியான நாவற்குளத்துக்கு சென்ற போது வண்டியை நிறுத்தி விட்டு, ராமநாதனை தாக்கி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி குருமாத்து, வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த செயலில் ஈடுபட்டது, குறிஞ்சி நகரை சேர்ந்த சாந்தசீலன் (வயது 26), சாமிப்பிள்ளைதோட்டத்தை சேர்ந்த பாஸ்கர் (19), நாவற்குளத்தை சேர்ந்த முருகன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் லாஸ்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். உதவி செய்வதுபோல் நடித்து மதுபோதையில் இருந்த அரசு ஊழியரை தாக்கி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com