கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கிராம மக்கள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கிராம மக்கள் நேற்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கிராம மக்கள் 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
Published on

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கதிராமங்கலம் அய்யனார் கோவில் வளாகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது கிராம மக்கள் விறகு அடுப்பில் சமையல் செய்து தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர், போலீசாரை விமர்சிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

கச்சா எண்ணெய் எடுக்கும் பணிக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என தகவல் பரவியதை தொடர்ந்து கதிராமங்கலம் கிராமத்தின் எல்லைகளில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 10 பேரும் நேற்றுமுன்தினம் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 28-ந் தேதி வரை காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 10 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 19-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது. இதில் 10 பேருக்கும் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கதிராமங்கலம் மக்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com