திருவானைக்காவலில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

திருவானைக்காவலில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவானைக்காவலில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
Published on

ஸ்ரீரங்கம்,

திருவானைக்காவலில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடைகள்

திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் அழகிரிபுரம் பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல், கீழ் தளங்களில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக இவை மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இதனால் அழகிரிபுரம் பகுதியை சேர்ந்த ஆண்கள் பலர் வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வைத்திருந்த பணத்தை டாஸ்மாக் கடைகளில் செலவளித்ததால், பல குடும்பங்களில் தகராறுகள் ஏற்பட்டுள்ளது.

முற்றுகை-மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அழகிரிபுரம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி கடைகளை முற்றுகையிட்டதுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, 40 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் வருமானம் இன்றி வீட்டில் முடங்கி கிடக்கிறோம். வீட்டிற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கையில் பணமில்லை. இருந்த பணத்தையும் வீட்டில் உள்ளவர்கள் எடுத்துச்சென்று மதுகுடித்துவிட்டு வந்துவிட்டனர். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது. இந்த கடைகள் 24 மணிநேரமும் இயங்குகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 70 வயது மூதாட்டி ஒருவர் இங்குள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் மூடாவிட்டால் நான் எனது குடும்பத்துடன் கடை முன் தீக்குளிப்பேன் என்று ஆவேசமாக கத்தினார்.

ரேஷன் அரிசியை கொட்டிய பெண்கள்

அப்போது அங்கிருந்த போலீசார், அரசு ரேஷனில் இலவச அரிசி வழங்குகிறது. அப்புறம் ஏன் கவலைப்படுகிறீர்கள்? என்றனர். அதற்கு ஆவேசமடைந்த பெண்கள், ரேஷனில் தரும் அரிசியை பாருங்கள், எவ்வளவு தரமற்றதாக உள்ளது. நாங்கள் இந்த அரிசியை சமைத்து தருகிறோம், நீங்கள் சாப்பிட்டு பாருங்கள் எனக்கூறி ரேஷனில் வழங்கிய அரிசியை கொண்டு வந்து ரோட்டில் கொட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் ஆணையர் ராமச்சந்திரன், தாசில்தார் ஸ்ரீதர், டாஸ்மாக் அதிகாரி துரைமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் இந்த கடைகளை மூடுவதற்கு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுங்கள் என்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அதிகாரிகள் இன்னும் ஒரு மாதத்தில் கடைகள் மாற்றப்படும் என எழுதி கொடுத்து விட்டு சென்றனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்ற பின், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com