தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்

பிரசார கூட்டம் நடைபெறும் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்
Published on

கோவை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதற்காக அவர் ஈரோட்டில் இருந்து கார் மூலம் கோவை வருகிறார். பின்னர் கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ஆதரித்து பேசுகிறார். பின்னர் அவர் பிரசார கூட்டம் முடிந்ததும் இரவில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

இதனால் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசார கூட்டம் நடைபெறும் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கோவை மாநகர பகுதியில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதுடன், வெளியூர்களில் இருந்து கோவை மாநகர பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

முன்னதாக 2ஆம் கட்ட பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நெல்லையில் தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com