ஜனநாயகவாதியை தோற்கடித்து விட்டோமே என்று மக்கள் வருத்தப்படும் காலம் விரைவில் வரும் - ஈ.ஆர். ஈஸ்வரன்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் இடையூறு செய்யாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகவாதியை தோற்கடித்து விட்டோமே என்று மக்கள் வருத்தப்படும் காலம் விரைவில் வரும் - ஈ.ஆர். ஈஸ்வரன்
Published on

சென்னை,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின் நடக்கின்ற நிகழ்வுகளை நேற்றிலிருந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக முயற்சி நடைபெறுகிறது என்ற பல்வேறு விஷயங்கள் செய்திகளில் தெரிவிக்கப்பட்டும், ஊடகங்களில் விவாதிக்கப்பட்டும், சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வந்த வண்ணம் இருப்பதையும் பெரும் குழப்பத்தோடு தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரவு முழுவதும் இருந்த பல்வேறு பரபரப்பான விவாதங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விடியலில் கொடுத்த அறிவிப்பின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக தன்னை தேடி வந்த வாய்ப்பை நிராகரித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் இடையூறு செய்யாது என்று அறிவித்து ஜனநாயக மாண்புகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். அதோடு மட்டுமில்லாமல் ஆறு மாத காலத்திற்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்றும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் தெரிவித்து தமிழ்நாட்டு மக்கள் மீது இருக்கின்ற அன்பை வெளிக்காட்டி இருக்கிறார். கடந்த காலங்களில் கூட தமிழ்நாட்டில் பல ஊடகங்களும், பல தலைவர்களும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி குழப்பத்திலிருந்த போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திமுகவிற்கு கொண்டு வந்து ஆட்சி அமைத்து முதல் -அமைச்சர் ஆகலாம் என்று சொன்னபோது மறுத்தவர் திமுக தலைவர். அதே நிலைப்பாட்டில் இப்போதும் இருந்து ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டேன் என்று சொல்லி இருப்பதை வரவேற்கின்றேன்.

இப்படிப்பட்ட ஒரு ஜனநாயக வாதியை தோற்கடித்து விட்டோமே என்று மக்கள் வருத்தப்படும் காலம் விரைவில் வரும். மக்கள் ஆதரவை பெற்றுத்தான் முதல்-அமைச்சர் ஆவேன் என்று கடந்த காலத்தில் எடுத்த நிலைப்பாடு போன்றே இப்போதும் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com