வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

தர்மபுரி நகராட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
Published on

தர்மபுரி:-

தர்மபுரி நகராட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. வருகிற 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலும் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.. இதில் 24 ஆண் வாக்குச்சாவடியும், 24 பெண் வாக்குச்சாவடியும், 9 பொது வாக்குச்சாவடியும் என மொத்தம் 57 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர், 2 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு பயிற்சி

இந்த நிலையில் தர்மபுரி நகராட்சி தேர்தலையொட்டி தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-வது கட்ட சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சித்ரா சுகுமார் தலைமை தாங்கினார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெயசீலன், ஜெயவர்மன், கலைவாணி, மண்டல தேர்தல் அலுவலர்கள் ரேவதி, நடராஜன், பிரியா, ரமண சரண், மதுரகவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தேர்தல் அலுவலர் மாதையன் வரவேற்றார்.

வாக்கை பதிவு செய்வது எப்படி?

முகாமில் தேர்தல் பார்வையாளரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனருமான பிருந்தாதேவி கலந்துகொண்டு தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் எப்படி வாக்கைப் பதிவுசெய்ய வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும், வாக்குச்சாவடியில் முகவர்களின் செயல்பாடுகள், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் வாக்கை எப்படி பதிவு செய்வது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com