மகளிர் இலவச பயண திட்டத்தால் பாதிப்பு: 200 தனியார் பஸ் சேவையை நிறுத்த முடிவு

மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் எங்களது தொழில் நலிவடையும் சூழலில் உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மகளிர் இலவச பயண திட்டத்தால் பாதிப்பு: 200 தனியார் பஸ் சேவையை நிறுத்த முடிவு
Published on

திருவனந்தபுரம்,

இலவச பயண திட்டம்

கேரளம் அரசு பிரியதர்ஷினி மகளிர் இலவச பஸ் பயண திட் டத்தை அறிவித்து உள்ளது. இதன் மூலம் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில், பிரியதர்ஷினி மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் தங்களது வருமானம் பாதிக்கப்படும், தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அத்துடன் தங்களது பஸ் சேவைகளை நிறுத்த முடிவு செய்து இருக்கின்றனர். இதற்கு மோட்டார் வாகன துறையிடம் ‘ஜி படிவம்' சமர்பிக்க உள்ளனர்.

சேவையை நிறுத்த முடிவு

'ஜி படிவம்' என்பது, குறிப்பிட்ட காலத்திற்கு பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைப்பதாக அளிக்கும் விண்ணப்பம் ஆகும். இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் பஸ்கள் ஓடாத அந்த காலத்திற்கு சாலை வரியை செலுத்த வேண்டியதில்லை. திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களின் சேவையை நிறுத்த 'ஜி படிவம்' சமர்பிக்க உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

மானியம் வழங்க வேண்டும்

மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தை அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் எங்களது தொழில் மேலும் நலிவடையும் சூழலில் உள்ளது. பாதி வருமானம் கூட கிடைக்காமல் பஸ்களை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் திருச்சூரில் இருந்து கொடுங்கல்லூர், மாளா, சாலக்குடி, எர்ணாகுளம், கோவிந்தாபுரம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ் சேவையை நிறுத்த உள்ளோம்.

இந்த திட்டம் கொண்டு வந்தபோது மாநில அரசு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு உதவுவதாக தெரிவித்தது. ஆனால் அதற்கான எந்த சலுகைகளையும் சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. எனவே தனியார் பஸ்களை அரசுடமையாக்க வேண்டும் அல்லது டீசல் விலையை பாதியாக குறைத்து மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com