ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை


ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 17 April 2024 10:43 PM GMT (Updated: 17 April 2024 11:01 PM GMT)

அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்து வந்த ஹேமந்த் சோரன் அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதை தொடர்ந்து அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

ஹேமந்த் சோரனை தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வருவாய் துறை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் பானு பிரதாப் பிரசாத் உள்பட மேலும் 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்த நிலையில் இந்த நிலமோசடி வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமான அந்து டிர்க்கி, ரியல்எஸ்டேட் அதிபரான பிபின் சிங் என்பவர் உள்பட 4 பேரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அந்து டிர்க்கி உள்பட 4 பேரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர்கள் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.


Next Story