இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை


இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2017 6:45 PM GMT (Updated: 24 Jun 2017 6:12 PM GMT)

28 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

சென்னை,

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்தில் இருந்து எந்திர படகில் மீன்பிடிக்க சென்ற 8 தமிழக மீனவர்களை 23–ந் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடி தடை காலத்துக்கு பிறகு இதுவரை 3 படகுகளில் சென்ற 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும், கடத்தலுக்கும், கைது சம்பவங்களுக்கும் ஆளாகும் நிலை பற்றி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும், நானும் உங்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து எடுத்து வரும் முயற்சிகளை உடைக்கும் அளவுக்கு இந்த கைது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

எனவே தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்பை இலங்கை அரசிடம் பதிவு செய்ய மத்திய வெளியுறவு துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

மேலும் அங்கு இதுவரை கைது செய்யப்பட்டு பிடித்துவைக்கப்பட்டுள்ள 28 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்கும்படி இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story