கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை ஒலிபரப்ப வேண்டும்
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
‘‘வந்தே மாதரம்’’ பாடலை பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக ஒலிபரப்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
நாட்டின் விடுதலைக்காக பல தலைவர்கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளனர். அவர்களது தியாகம் இளைய தலைமுறைக்கு தெரிய வேண்டும். அது அவர்களுக்கு தேசபக்தியையும், நாட்டின் சேவையில் தம்மை ஈடுபடுத்தி கொள்ளும் நல்லெண்ணத்தையும் வளர்க்க உதவும்.
மேலும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் அலைபேசி, முகநூல், வாட்ஸ்–அப் என்று எல்லோரும் தமது நேரத்தை வீணடித்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ‘‘வந்தே மாதரம்’’ (தாயே வணக்கம்) பாடல் மூலம் நல்ல சிந்தனைகளை வளர்த்து நாட்டின் ஒளிமயமான வளர்ச்சிக்கு துணை நிற்க, இந்த தீர்ப்பு ஏற்பாடாக அமையும்.
இந்த உத்தரவை உடனடியாக தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.