சாலை ஆக்கிரமிப்பை அகற்ற ரூ.3 லட்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது


லட்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது
x

அரசு சாலையில் நடந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ.3 லட்சம் கேட்ட பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். இந்த பணத்தை வாங்கிய போலீஸ்காரரும் சிக்கினார்.

சென்னை,

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்கு செல்வதற்காக 40 அடி சாலை இருந்தது. இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு தனிநபர் ஒருவர் அதில் வீடு கட்டி விட்டார். இதனால் 40 அடி சாலை 12 அடியாக குறுகிவிட்டது. இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆனால் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர், இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு தெற்கு மண்டல துணை கமிஷனர் அமித்திடம் முறையிட்டார். அவர் 3 நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதியளித்தார். உதவி கமிஷனர் ஒருவரை அழைத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். இப்பணியை கண்காணிக்க தாசில்தார் சரோஜாவை நியமித்தார். இதில் தாசில்தார் சரோஜா தனது லஞ்ச விளையாட்டை தொடங்கினார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் இந்த சாலை 40 அடி சாலையாக இப்பகுதி மக்களுக்கு வழி கிடைக்கும். மேலும் இங்குள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும். எனவே அருகில் உள்ள நில உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி வாங்கி தந்தால் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கு தொடர்ந்த பொன் தங்கவேலுவிடம் தாசில்தார் சரோஜா கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

பின்னர் லஞ்சமாக கேட்ட ரூ.1 கோடி பணம் ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.3 லட்சத்தை முன்பணமாக கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தை கொடுக்க அவர் விரும்பவில்லை. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரூ.3 லட்சம் பணத்தை வாங்கும்போது தாசில்தார் சரோஜாவை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். அதன்படி நேற்று மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் சரோஜாவின் அலுவலகத்தை கண்காணித்தனர்.

அடையார் எல்.பி.சாலையில் உள்ள சரோஜாவின் அலுவலகத்துக்கு ரூ.3 லட்சம் லஞ்ச பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் அந்த பணத்தை சரோஜா நேரடியாக வாங்க மறுத்துவிட்டார். தனது கணவரான பரங்கிமலை ஆயுதப்படை தலைமை போலீஸ்காரரான பிரவீனிடம் சொல்லி, லஞ்ச பணத்தை அவரது நண்பரான பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ்காரர் அருண்குமாரிடம் கொடுக்குமாறு சரோஜா கூறியதாக தெரிகிறது.

அதன்பேரில் ரூ.3 லட்சம் லஞ்சப் பணம் போலீஸ்காரர் அருண்குமாரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமான போலீஸ்காரர் அருண்குமாரை பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் மீட்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச பணம் கேட்ட தாசில்தார் சரோஜாவும் கைது செய்யப்பட்டார்.

சரோஜா தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாகவும் இருந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட 41 வேட்பாளர்கள் விவரங்கள், தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அவருடைய அலுவலகத்தில் உள்ளது. எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது பற்றி தகவல் கிடைத்தவுடன் தமிழக பா.ஜனதா மாநில செயலாளரும், தென்சென்னை தொகுதி பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் இந்த அலுவலகத்துக்கு விரைந்து வந்தார். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர், கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ள அலுவலகத்தில் இந்த தொகுதியில் போட்டியிட்ட 41 வேட்பாளர்களின் முக்கிய ஆவணங்கள் இருக்கிறது. எனவே 41 வேட்பாளர்கள் முன்னிலையில்தான் சோதனை நடத்தி இருக்க வேண்டும். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பதை அவர்களிடம் பட்டியலிட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை லஞ்ச ஒழிப்பு போலீசார் பின்பற்றவில்லை. எனவே இந்த சோதனையில் சதித்திட்டம் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story