காட்டுக்குள் 14 வயது சிறுமி... நண்பன், கும்பலால் பலாத்காரம்; 11 வயது சிறுவனும் கைது


காட்டுக்குள் 14 வயது சிறுமி... நண்பன், கும்பலால் பலாத்காரம்; 11 வயது சிறுவனும் கைது
x
தினத்தந்தி 10 May 2024 12:45 AM GMT (Updated: 10 May 2024 1:04 AM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலில், நண்பன் உள்பட 10 பேரும் 11 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

பிரஸ்ஸல்ஸ்,

பெல்ஜியம் நாட்டில் இருந்து வெளிவரும் பிரஸ்ஸல்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்ஸ் எல்லையையொட்டிய மேற்கு பிளாண்டர்ஸ் பகுதியில் கோர்த்ரிஜ்க் நகரில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையையொட்டி பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதில், 14 வயது சிறுமி தன்னுடைய நண்பருடன் ஒன்றாக பொழுதுபோக்க சென்றுள்ளார். அப்போது, சிறுவன் அந்த சிறுமியை நைசாக பேசி வனப்பகுதிக்கு அழைத்து சென்றான்.

அடர்ந்த வனத்திற்குள் சென்றதும் ஆண் நண்பனின் தோழர்களும் வந்துள்ளனர். அவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 2 நாட்களாக காட்டுக்குள் சிறுமியை பிடித்து வைத்துள்ளனர். அந்த கும்பல் பலாத்கார தாக்குதலை அவர்களுடைய உயர்ரக மொபைல் போன்களில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோக்களை சமூக ஊடகத்திலும் வெளியிட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பலாத்கார சம்பவத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டு உள்ளனர். இந்த 10 பேரும் 11 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் மகன்கள் என நம்பப்படுகிறது. சிறுமியின் நண்பன் உள்பட 10 பேரையும் போலீசார் பிடித்து விட்டனர். இவர்களில் 6 பேரை ஓரிடத்திலும், மற்ற 4 பேரை வீட்டு சிறையிலும் வைத்துள்ளனர்.

இவர்களில் 11 வயதுடைய சிறுவனும் ஒருவன் என அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் உள்ள டாம் ஜேன்சன்ஸ் கூறுகிறார். அவர்கள் அனைவரும் இளம் வயதினர். அதனால், வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சிறுவர் சீர்திருத்த கோர்ட்டானது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

நாங்கள் பாதிக்கப்பட்ட சிறுமியை கவனிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறோம். ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக தொடர்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.


Next Story