நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஹால்டிக்கெட்களில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-05 00:58 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு, இன்று (ஞாயிற்றுகிழமை) நடக்கிறது.

இந்த தேர்வை, தமிழகத்தில் 1½ லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடுமுழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்வானது, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை தேசிய தேர்வுகள் முகமை வழங்கி உள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவுரை விவரங்கள் பின்வருமாறு:-

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஹால்டிக்கெட்களில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசல் மற்றும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டிய செல்லும் வகையில் திட்டமிட வேண்டும். தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தரவேண்டும்.

அதன்பிறகு, வருகை தரும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி கிடையாது. தேர்வர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

தேர்வு மையங்களுக்குள் பேப்பர் துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள்பை, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ்கள், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம். தேர்வு தொடங்கி முதல் ஒரு மணிநேரம் மற்றும் கடைசி அரை மணிநேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாசார, மதம் சார்ந்த ஆடை உடுத்தி வருவோர், சோதனைகளுக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்.

மாணவர்கள் சாதாரண செருப்பு, குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதி உண்டு. ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது. தேர்வு முடியும் முன்பே விடைத்தாளை ஒப்படைத்துவிட்டு வெளியே வரக்கூடாது.

தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்