மக்களவை தேர்தல்; குஜராத்தில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு


தினத்தந்தி 22 April 2024 10:42 AM GMT (Updated: 22 April 2024 12:57 PM GMT)

குஜராத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவை தொகுதிக்கான தேர்தலில், தலால் மற்றும் கும்பானி தவிர சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பியாரேலால் பாரதி என 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

சூரத்,

குஜராத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற மே 7-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. குஜராத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. அவருக்கு போலியான சாட்சி கையெழுத்திடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அவருடைய வேட்பு மனுவிலும் போலியான சாட்சி கையெழுத்துகள் இடம் பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த வேட்பு மனு கலெக்டரால் ரத்து செய்யப்பட்டது. இதனால், போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. இதனையடுத்து, சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீல் இன்று தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், சூரத் மக்களவை தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த தொகுதிக்கான தேர்தலில், தலால் மற்றும் கும்பானி தவிர சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பியாரேலால் பாரதி என 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய வேட்பு மனுக்களை இன்று திரும்ப பெற்று விட்டனர். இதனால், தலால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.


Next Story