ஆந்திராவில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்


ஆந்திராவில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
x

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அமராவதி,

ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 13-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதனால் அங்கு தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போதைய ஆளுங்கட்சியான முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு அணியாகவும், பா.ஜனதா, முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் நாடாளுமன்ற தொகுதியில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், மீதம் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதாவும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி உள்ளன.

இந்நிலையில், ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். வழக்கமாக தனது அரசியல் நிகழ்வுகள் என்றாலும் சரி, ரசிகர்களை சந்திப்பது என்றாலும் சரி பிரமாண்டமாக கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்துவது பவன் கல்யாண் வழக்கம்.

அந்த வகையில் பிதாபுரம் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக நேற்று தனது வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் தனது காரின் மேல் அமர்ந்து பிதாபுரம் வரை ஊர்வலமாக சென்று நடிகர் பவன் கல்யாண் மனுதாக்கல் செய்தார்.

முன்னதாக ஊர்வலத்தின்போது அவரது ரசிகர்கள் கைகளில் கட்சிக்கொடி, பவன் கல்யாணின் படம் பொறித்த கொடிகளுடன் 'ஜெய் பவன் கல்யாண்... ஜெய் ஜனசேனா' என கோஷமிட்டபடி சென்றனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த ஊர்வலம் மிக பிரமாண்டமாக இருந்தது.



Next Story