ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை


ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை
x

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை ஆஸ்திரியா செல்கிறார்.

புதுடெல்லி,

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இரு நாட்டு உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று ரஷியா செல்கிறார். இன்றும், நாளையும் அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் மோடி, அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.

இதில் பிராந்திய, சர்வதேச நலன் சார்ந்த பிரச்சினைகள் முக்கிய இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும். பாதுகாப்பு, கல்வி, முதலீடு, கலாசாரம், மக்களிடையிலான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் பற்றியும் அவர்கள் விவாதிப்பார்கள் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு கடைசியாக ரஷியா சென்றிருந்தார். அதன்பிறகு தற்போதுதான் மீண்டும் அவர் ரஷியா செல்கிறார். ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா செல்கிறார். 10-ம் தேதி வரை அங்கு இருக்கும் பிரதமர் மோடி, அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா செல்வது கடந்த 41 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

1 More update

Next Story