நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைப்படுத்தும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்


நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைப்படுத்தும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்
x
தினத்தந்தி 6 Feb 2024 7:52 AM GMT (Updated: 6 Feb 2024 8:49 AM GMT)

நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைபடுத்தும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும், உள்ளூர், வெளியூர் மக்களும் ராமர் கோவிலை பார்வையிட அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் மதச்சார்பின்மையை அயோத்தி ராமர் கோவில் வலிமைப்படுத்தும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநில தலைவர் சித்திக் அலி ஷிஹப் தங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பால்படா நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் சித்திக் அலி, அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது நாட்டின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கை. அதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியதில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோர்ட்டு தீர்ப்பின் மற்றொரு பகுதியாக பாபர் மசூதியும் கட்டப்பட உள்ளது. அதில் இருந்து நாம் பின்வாங்க முடியாது. அயோத்தி ராமர் கோவிலும், பாபர் மசூதியும் நாட்டின் மதச்சார்பின்மையை உறுதிபடுத்தும் சிறந்த உதாரணங்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.


Next Story