இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி

நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்தநாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.தவக்காலத்தின் இறுதி வாரத்தின் தொடக்கமாக கடந்த 24-ந் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

தாழ்மையின் உருவேயான இயேசு தம்முடைய சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, 'நான் உங்களில் அன்பாய் இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள்' என்றார். அன்றைய நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில் நேற்று பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புனிதவெள்ளியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் ஈடில்லா தியாகத்தை நினைவுகூர்வோம். அந்த தியாகம் நமக்கு கற்பிக்கும் இரக்கம் மற்றும் மன்னிப்பின் மூலம் பலம் பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com