கடைக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை


கடைக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை
x

மளிகை கடைக்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் தாசன் (வயது 55), அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த 2 சம்பவம் குறித்தும் ஒரே வழக்காக பதிவு செய்து தாசனை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட தாசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story