மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள்: ‘மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்’ சென்னை பிரசாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம்


மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள்: ‘மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்’ சென்னை பிரசாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம்
x
தினத்தந்தி 28 March 2021 10:52 PM GMT (Updated: 28 March 2021 10:52 PM GMT)

மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள் கிடப்பதாகவும், இதை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சென்னையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னை வந்தார்.

அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அசன் மவுலானா (வேளச்சேரி), செல்வபெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர்), முனிரத்தினம் (சோளிங்கர்), சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர், பா.ஜ.க.வில் சேர்ந்த புகைப்படத்தை பார்த்தேன். அமித்ஷா சோபாவில் அமர்ந்திருக்க அவர் முன்பு கும்பிடு போட்டபடி மக்கள் பிரதிநிதி நின்று கொண்டிருந்தார். ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு அடிமைபோல் நிற்பதை நான் விரும்பவில்லை. பா.ஜ.க.வை பொறுத்தவரை இந்த மாதிரி பழக்க வழக்கங்களைத்தான் எதிர்பார்க்கிறது.

‘மானம் உள்ள தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்’

தொன்மையான பாரம்பரியமும், கலாசாரமும் மிகுந்த தமிழகத்தின் முதல்-அமைச்சர், ஆட்சியாளர்கள் மோடி மற்றும் அமித்ஷா காலடியில் விழுந்து கிடக்கிறார்கள்.

தமிழகத்திற்கு நீண்ட நெடிய வரலாறும், பாரம்பரியமும் உள்ளது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த மாநிலத்தின் முதல்-அமைச்சர் இவ்வாறு விழுந்து கிடப்பதை பார்த்தால் கோபம் தான் வருகிறது. மானம் உள்ள தமிழர்கள் யாரும் காலில் விழுவதை விரும்ப மாட்டார்கள். அதை ஏற்க மாட்டார்கள். ஆனால், தமிழக முதல்-அமைச்சருக்கு காலில் விழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நேர்மை இழந்து விட்டார்

மக்களிடம் சுரண்டிய பணத்தால் அவர் நேர்மை இழந்துவிட்டார். அதனால்தான் காலில் விழவேண்டிய கட்டாயம். எனவே தான் நான் முழு வலிமையையும் கொடுத்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை வீழ்த்த போராடுகிறேன்.

தற்போது தமிழரின் பண்பாட்டின் மீது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் மிகப்பெரிய பண பலம் உள்ளது. இந்த தாக்குதலை தொடங்கி வைத்தது ஆர்.எஸ்.எஸ்.தான். அவர்கள் எதிர்பார்ப்பது அவர்கள் முன்பு தமிழகம் மண்டியிட வேண்டும் என்பதுதான்.

தலைகுனிந்த சரித்திரம் இல்லை

3 ஆயிரம் ஆண்டு பழமையான வரலாறு கொண்ட தமிழர்கள் யாரிடமும் தலைகுனிந்த சரித்திரம் இல்லை. தமிழர்கள் எல்லோரையும் மரியாதையாகவே நடத்துவார்கள். யாரையும் மரியாதை குறைவாக நடத்துவதில்லை.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த தேர்தல். இந்த தேர்தல், அ.தி.மு.க., மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் ஆகியோருக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்த தேர்தல் முடிவில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி சுக்குநாறாக நொறுங்கி விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி மொழிபெயர்த்தார்

ராகுல்காந்தியின் பேச்சை, ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியை துறந்து சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சசிகாந்த் செந்தில் மொழிபெயர்த்தார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயலாளர் அகரம் கோபி, தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story