இந்திய பிரதமர் மோடி ரஷியாவிற்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது - ரஷிய அதிபர் புதின்


இந்திய பிரதமர் மோடி ரஷியாவிற்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது - ரஷிய அதிபர் புதின்
x

Image Courtacy: ANI

பிரதமர் மோடியின் ரஷிய பயணத்தின் போது, தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றுள்ளார் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் , ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த ஆண்டு ரஷியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அதிபர் புதின், தற்போதைய அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேசவும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷியாவிற்கு வருகை தருவது குறித்து மகிழ்ச்சி அடைவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் நடந்த சந்திப்பின் போது, "எங்கள் நண்பரான பிரதமர் மோடியை ரஷியாவில் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். பிரதமர் மோடியின் பயணத்தின் போது, நாங்கள் அனைத்து தொடர்புடைய, தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியும் மற்றும் ரஷிய மற்றும் இந்திய உறவின் வாய்ப்புகள் குறித்து பேச முடியும்" என்று புதின் கூறினார்.


Next Story