திருவண்ணாமலையில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சித்ரா பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2024-04-25 04:34 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நேற்று முன்தினம் அதிகாலை 4.16 மணி அளவில் தொடங்கி நேற்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை முதல் நேற்று காலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயிலின் தாக்கம் காரணமாக கூட்டம் குறைந்து காணப்பட்டது. பின்னர் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

2-வது நாளாக நேற்று கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் காலை 9 மணி வரையில் காணப்பட்டது. பின்னர் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.

சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்று முடித்த பக்தர்கள் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

சித்ரா பவுர்ணமியையொட்டி தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கிரிவலம் சென்ற பக்தர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் திரும்பி சென்றனர்.

பஸ்களில் உட்கார்ந்து செல்ல இடம் கிடைக்காத பயணிகள் பஸ் படியில் தொங்கியபடி சென்றனர். மேலும் இரவில் கிரிவலம் சென்ற பக்தர்கள் ரெயில் நிலையத்தில் காத்திருந்து நேற்று காலையில் திருப்பதி மற்றும் விழுப்புரம் சென்ற ரெயிலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.

14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கடந்த 22-ந் தேதி முதல் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தூய்மை பணியில் 1,800 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ந்து தூய்மை பணியினை மேற்கொண்டனர். நேற்று காலையில் கிரிவலப் பாதை முழுவதும் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்