சினிமா செய்திகள்

"அவரை ரொம்ப நம்பினேன்... ஆனா ஏமாத்திட்டாரு’ - காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகை

நடிகையின் இந்த உருக்கமான பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள இளம் நடிகை அனன்யா நாகல்லா, சமீபத்திய பேட்டியில் தனது காதல் முறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளியைச் சேர்ந்த அனன்யா நாகல்லா, சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக குறும்படங்களில் நடித்த அவர், பின்னர் மல்லேஷம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பிறகு வக்கீல் சாப், பிளேபேக், மேஸ்ட்ரோ, சாகுந்தலம், தந்த்ரா, பொட்டேல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கும் அனன்யாவிடம், “சமீபத்தில் எதற்காகவாவது அழுதிருக்கிறீர்களா?” என்று பேட்டியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒருவருக்காக மிகவும் அழுதேன். அதை காதல் தோல்வி என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒருவரை நான் மிகவும் நம்பினேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். காலையில் எழுந்தவுடன் அந்த நினைவுகளே என்னை வாட்டுகின்றன. நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அந்த வலி மீண்டும் வந்து தாக்குகிறது. இந்த பிரேக்அப் வேதனையை கடந்த 3 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன்.”

அனன்யாவின் இந்த உருக்கமான பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.