சினிமா செய்திகள்

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு- தலைவி படம் குறித்து - நடிகை கங்கனா ரனாவத்

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு என 'தலைவி' படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக கங்கனா ரனாவத் நெகிழ்ச்சியுடன் டுவீட் செய்துள்ளார்.

மும்பை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

கொரோனா அச்சத்தால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாகத் தொடங்கப்பட்டு இன்று முடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இன்று நாங்கள் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான 'தலைவி'யின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம், எனக்கு ரத்தமும் சதையுமாகக் கிடைத்தது. நான் அதை மிகவும் நேசித்தேன். ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கலவையான உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பு. 'தலைவி' படக்குழுவினருக்கு நன்றி". இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

'தலைவி' படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு.