சென்னை,
சமூக வலைதளங்களில் பிரபலமான 'எரும சாணி' புகழ் விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது மலையாள நடிகை அனுராகா எஸ். நம்பியார் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"ரெசார்ட்" (Resort) என்ற இணையத் தொடருக்காக (Web Series) நடிகை அனுராகாவுடன் ஓராண்டு கால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தம் செய்தபடி படப்பிடிப்பு சரியாக நடத்தாமலும், அவருக்கு வழங்க வேண்டிய சம்பளத்தைத் தராமலும் படக்குழு தன்னை வஞ்சித்ததாக அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். ஓராண்டு காலம் தனது நேரத்தை வீணடித்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரமற்றதாக இருந்ததாகவும், அதனால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் உதவி கேட்டபோது, விஜய் குமாரின் மனைவி தன்னை மிகவும் கேவலமான சொற்களால் திட்டி, மன ரீதியாகத் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
தன்னைப் போன்ற இளம் கலைஞர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களை மிரட்டும் இது போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல யூடியூப் பிரபலம் விஜய் குமார் மீது இத்தகைய கடுமையான புகாரை ஒரு நடிகை முன்வைத்திருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.