சென்னை,
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா ஆகியோரின் மகளான இவர் ’பைலட்ஸ்’, ‘அச்சனேயனேனிக்கிஷ்டம்’ போன்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கீர்த்தியின் முதல் சம்பளம் மிகச் சிறியது. கல்லூரி நாட்களில் ஒரு பேஷன் ஷோவில் பின்புல உதவியாளராக பணியாற்றியதற்காக ரூ.500 மட்டுமே கிடைத்ததாக அவர் பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதிலும் சிறப்பு என்னவென்றால், அந்த தொகையை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல், தந்தையிடம் கொடுத்ததை நினைவுகூர்ந்தார்.
தமிழில் 2015-ம் ஆண்டு வெளியான ’இது என்ன மாயம்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ரஜினி முருகன், ரெமோ படங்கள் கீர்த்திக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் 2018-ல் வெளியான ’நடிகையர் திலகம்’ படமே அவரது வாழ்க்கையை மாற்றியது. மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் கீர்த்தி நடித்த விதம் பாராட்டைப் பெற்றதுடன், சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார்.
அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், மகேஷ் பாபு, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார். தற்போது ஒரு படத்திற்கு ரூ.3 முதல் 4 கோடி வரை சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 2024 டிசம்பரில், நண்பர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.