சினிமா செய்திகள்

ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறைவாசம்: நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகை பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

பெங்களூரு,

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே தர்ஷன், பவித்ரா கவுடாவுக்கு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்திருந்தது. இதனால் அவர்கள் மீண்டும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இதற்கிடையில், தனது மகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருவதாகவும், பொதுத்தேர்வு தொடங்கும் போது மகளுடன் இருப்பதற்காக 25 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் பவித்ரா கவுடா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன் நடைபெற்றது.

அப்போது பவித்ரா கவுடா சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் மகள் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறார். பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால், மகளுடன் மனுதாரர் இருந்தால் படிப்புக்கு உதவியாக இருக்கும். எனவே 25 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை கோர்ட்டில் நடக்கிறது. சாட்சிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க கூடும். எனவே பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி, மகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதை காரணம் காட்டி கொலை வழக்கில் ஜாமீன் கேட்பதை ஏற்க முடியாது என்றும் கூறினார். இதனால் ஜாமீன் பெற முயன்ற பவித்ரா கவுடா ஏமாற்றம் அடைந்துள்ளார். சிறையிலேயே அவர் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.