மும்பை
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் `விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களை சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 3 வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்துள்ள நிலையில், ஒருவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
"தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டார்கள், பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, இதுவும் ஒரு ஜிகாதி தேசம்தான்... இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று கங்கனா கூறி உள்ளார்.
அவரது அடுத்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, லத்தி (குச்சி)தான் ஒரே தீர்வு, சர்வாதிகாரம்தான் ஒரே தீர்மானம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம் என்று கங்கனா கூறி உள்ளார்.