சினிமா செய்திகள்

’'பாகுபலி' உலக அளவில் ஹிட் ஆக அதுதான் முக்கிய காரணம்’... வைரலாகும் தமன்னாவின் கருத்து

பாகுபலி படத்தின் உருவாக்கம் குறித்து தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னை,

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா, தற்போது பாலிவுட்டில் பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ’பாகுபலி’. இந்நிலையில், அத்திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள தமன்னா, சமீபகாலமாக சிறப்பு பாடல்களில் அதிகம் தோன்றுவது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகுபலி படத்தின் உருவாக்கம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து தமன்னா கூறுகையில், “இப்போது திரும்பிப் பார்க்கும்போது, பாகுபலி படத்திற்காக எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் சரியானதாகவும் அற்புதமானதாகவும் தெரிகிறது. அந்த நேரத்தில் ஒரு பிராந்திய மொழித் திரைப்படத்திற்காக 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டை செலவிடுவது சாதாரண விஷயமல்ல. அப்போதைய சந்தை சூழலைப் பார்த்தால், அது மிகப்பெரிய ஆபத்தான முயற்சியாகவே கருதப்பட்டது. வணிக ரீதியாக படம் தோல்வியடைந்திருந்தால், பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தொலைநோக்கு பார்வையுடன் எந்த இடத்திலும் சமரசம் செய்யாமல் படத்தை உருவாக்கினார். அந்த உறுதியும் நம்பிக்கையும்தான் பாகுபலி திரைப்படத்தை உலகளவில் வெற்றியடைய வைத்தது. இல்லையெனில் வர்த்தக ரீதியாக பல சவால்களை சந்தித்திருக்கும்” என்றார்.

2015-ல் வெளியான ’பாகுபலி’ மற்றும் அதன் தொடர்ச்சியாக உருவான ’பாகுபலி 2’ இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய படங்களாக கருதப்படுகின்றன. இந்தப் படங்கள் இந்திய திரைப்படங்களுக்கு உலகளவில் புதிய சந்தையையும் அங்கீகாரத்தையும் உருவாக்கியது.