சென்னை,
“தி கேரளா ஸ்டோரி - 2 படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டால் ஜனநாயக சக்திகளை திரட்டி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “திரைப்படத்தின் மூலம் நல்லிணக்கத்தை கெடுக்க முயலும் எந்த முயற்சியையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம். தி கேரளா ஸ்டோரி - 2 என்ற திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியும் கெடுக்கும் காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக தெரிய வருகிறது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் தன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். இதனை தமிழ்நாட்டில் திரையிடுவதை தவிர்க்குமாறு திரையரங்க உரிமையாளர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு மாறாக திரிபு வாதத்தை விதைக்க நினைப்பதும், அதன் மூலம் கலவரங்களை தூண்ட நினைப்பதும் ஏற்புடையதல்ல.
கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பெயர் திரைப்படம் என்றால், அதனை எதிர்ப்பது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதனை மீறி திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முயன்றால், ஜனநாயக சக்திகளை திரட்டி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம். அனைத்து சமூகத்தவரின் ஒற்றுமையும், பொது அமைதியுமே எங்களுக்கு முக்கியம். அதை கெடுக்க முயலும் எந்த முயற்சிகளையும் ஜனநாயக வழியில் தடுத்து நிறுத்துவோம்!" என்று தெரிவித்திருக்கிறார்.