சென்னை,
தனக்கு பிடித்த இயக்குனர், நெல்சன் என்று நடிகர் லெஜண்ட் சரவணன் கூறி உள்ளார். சமீபத்திய விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ’எனது மூன்றாவது படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். இது ஒரு புதிய ஸ்கிரிப்ட், இதுபோல் படம் யாரும் பண்ணதே இல்லை. அதில் நடிப்பது பெரிய சவாலாக இருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து தனக்கு பிடித்த இயக்குனர் பற்றி பேசுகையில், "எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார். தலைவர் இப்ப வேற லெவலுக்கு போய் விட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரை கையில் பிடிக்க முடியாது போல. ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன். பாஸ் உங்க படத்துல 2-3 நாட்கள் நடிக்கிற மாதிரி ஏதாவது பயரான கேமியோ ரோல் இருந்தா சொல்லுங்க. பண்ணிடலாம்" என்றார்.
தொடர்ந்து தன் மீதான விமர்சனங்கள் பற்றி பேசுகையில், ‘விமர்சனங்களை பாத்ரூம் வாசகம்போல எடுத்துக் கொள்கிறேன். அதில் நல்லவை இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்வேன். என்னிடம் 30க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளது, தற்போது புதிய கார்கள் வாங்குவதை நிறுத்தி மக்கள் நலத்திற்காக பணத்தை செலவிடுகிறேன்’ என்றார்.
லெஜண்ட் சரவணன் தற்போது தனது 2-வது படமான லீடரில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.