சென்னை,
பொதுவாக பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டுதல், பார்ட்டி, கொண்டாட்டம் என கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக பிரபலங்களின் பிறந்தநாள் விழாக்கள் இன்னும் பிரமாண்டமாக இருக்கும். ஆனால் சிலர் தங்களின் பிறந்தநாளை சமூக சேவைக்கான நாளாக மாற்றி, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது 31வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் பகுதியில் நடைபெற்ற 251 ஏழை பெண்களின் திருமணத்திற்குக்கு தேவையான நிதி உதவியை வழங்கி, மனம் கவர்ந்த செயலை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொள்ளாதிருந்தாலும், பொருளாதாரரீதியாக முழு ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை ஊர்வசி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. கடந்த 2013-ம் ஆண்டு அனில் சர்மா இயக்கத்தில் வெளியான 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.