சினிமா செய்திகள்

மூத்த நடிகர் சத்யேந்திரா மரணம் - உடலை வாங்க ஆள் இல்லாத அவலம்? - நடிகை வினோதினி கோரிக்கை

அவரது உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் முன்வர வேண்டும் என நடிகை வினோதினி வைத்தியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

மூத்த நடிகர் சத்யேந்திரா (65) உடல்நலக் குறைவால் நேற்று (மே 28) காலமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த சத்யேந்திரா புகழ்பெற்ற கன்னட நாடக இயக்குநர் பி.வி.காரந்தின் தொடர்பால் நாடகங்களில் நடிக்க துவங்கினார். பின், தேசிய விருது பெற்ற 'நாகபர்ணா' என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெளுங்கு, கன்னடம் என 7 மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப் படங்களிலும், 150-க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துள்ளார். 15 குறும்படங்களை இயக்கி உள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் எனப் பன்முகத்திறன் கொண்ட இவர், தமிழில் 'ஏழாவது மனிதன்' (1982) படம் மூலம் அறிமுகமானார். மண்வாசனை, சத்யா, மீண்டும் ஒரு காதல் கதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு மற்றும் 2021-ல் வெளியான 'ஜெயில்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சத்யேந்திராவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அல்லது கர்நாடகாவில் உள்ள அவரது இரத்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் முன்வர வேண்டும் என நடிகை வினோதினி வைத்தியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது உறவினர்களைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.