சென்னை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர், விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் நடிகை ருக்மிணி வசந்த் பரிசீலிக்கப்பட்டதாகவும், பின்னர் சில காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து ஜான்வி கபூரை படக்குழு அணுகியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை தீபக் ரெட்டி இயக்க உள்ளதாகவும் சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாகவும் தெரிகிறது. பாலிவுட்டில் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி பெறாத ஜான்வி கபூர், தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். குறிப்பாக, ஜுனியர் என்.டி.ஆர் உடன் நடித்த ’தேவரா’திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு திரையுலகில் அவரது வரவேற்பு அதிகரித்துள்ளது.
தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக ‘பெத்தி’ திரைப்படத்திலும் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்நிலையில், தனது தாய் ஸ்ரீதேவியின் சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் கோலிவுட்டில் துருவ் விக்ரம் படம் மூலம் அறிமுகமாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.