சினிமா விமர்சனம்

அறிவான் - சினிமா விமர்சனம்

பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகருகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக், நேர்மை தவறாத அதிகாரியாக இருக்கிறார். ஒரு வழக்கில் அவரது நேர்மைக்கு பரிசாக சஸ்பெண்டு ஆகிறார். சஸ்பெண்டு முடிந்து, நெய்வேலியில் பணிக்கு செல்லும் ஆனந்த் நாக், அங்கு மர்மமான முறையில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விசாரணையில் களமிறங்குகிறார்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, போலீஸ் நிலையத்திலேயே ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். இதையடுத்து விசாரணையை இன்னும் துரிதப்படுத்துகிறார் ஆனந்த் நாக். இதற்கிடையில் ஆனந்த் நாக்கின் காதலியை கொலை செய்ய கொலைகாரன் திட்டமிடுகிறான். ஆனந்த் நாக் தனது காதலியை காப்பாற்றினாரா? கொலையாளி யார்? இந்த கொலைகளுக்கு என்ன காரணம்? என்ற பரபரப்பான பலகேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் ஆனந்த் நாக், முடிந்தவரை தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் அவர், தனக்குத்தானே கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தும் விதம் ரசிக்க வைக்கிறது.

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறையின்றி நடித்துக் கொடுத்திருக்கிறார் ஜனனி. அவரது துருதுரு நடிப்பு கவர்கிறது. பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், குருமூர்த்தி உள்ளிட்ட இதர நடிகர்-நடிகைகள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

யஷ்வந்த் பாலாஜியின் ஒளிப்பதிவும், கார்த்திக் இசையும் படத்தின் பரபரப்புக்கு துணை நிற்கின்றன. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகருகிறது.

வழக்கமான கிரைம் - திரில்லர் கதை என்றாலும், புதுமையான காட்சிகள் மூலம் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்று ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் எஸ்.அருண் பிரசாத். கொலையாளி யார்? என்பதை இறுதிவரை கொண்டு சென்ற சஸ்பென்ஸ் பாராட்டுக்குரியது.

Also read:ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2' படத்தின் டீசர் வெளியானது