அத்திவரதர் தரிசனம் 
ஆன்மிகம்

கும்பகோணத்தில் பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்தி வரதர்.. 10 நாட்கள் தரிசிக்கலாம்

விழா நாட்களில் அத்திவரதருக்கு தைலக்காப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. 180 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் கடந்த 1915-ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர், சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்கள், முன்ஜென்ம பாவங்கள் நீங்கும் என்றும், நினைத்த காரியம் கைகூடும் என்றும் ஐதீகம்.

இந்த நிலையில், சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 10-ந்தேதி வரை அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்காக ஆகம பூஜைகளுடன் நேற்று (சனிக்கிழமை) மாலை அத்திவரதரை பாதாள அறையில் இருந்து வெளியே எழுந்தருளச் செய்தனர்.

தொடா்ந்து, அத்திவரதர் பிரம்மன் கோவிலுக்கு வீதியுலாவாக புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தார். பின்னர், அத்திவரதர்- தாயாருக்கு தைலகாப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தைலக்காப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் அத்திவரதரை தாிசனம் செய்யலாம்.