திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு சென்ற பக்தர்களின் வரிசையானது வட ஒத்தவாடை தெரு வரை நீண்டு காணப்பட்டது. மேலும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் பக்தர்கள் காத்திருந்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.
நேற்று பகலில் வெயிலின் அளவு அதிகமாகவே இருந்தது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நின்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் நடமாடும் பகுதிகளில் வெயிலினால் கால் பாதம் சுடாமல் இருக்க தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வரவேற்றனர்.
மேலும் நேற்று காலையில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கத்தினால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. மாலையில் பலர் கிரிவலம் சென்றனர்.