தேர் இழுத்த பக்தர்கள் 
ஆன்மிகம்

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

ஆதிமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சமயபுரம்:

திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த மாதம் 8 ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆதிமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிம்மம், யானை, ரிஷபம், அன்ன , குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து காலை 9.20 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகளுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் கோயிலை அடைந்து அம்மனை வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.