குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசிக் கொடை விழா கடந்த 1-ந் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி 10-ந் தேதி வரை பத்து நாட்கள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு, கடலில் புனித தீர்த்தமாடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவின் தொடர்ச்சியாக எட்டாம் கொடை விழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை நடைபெற்றது. 7 மணி முதல் பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு பஜனை, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெறுகிறது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். எராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
எட்டாம் கொடை விழாவை முன்னிடடு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவின் தொடர்ச்சியாக 22-ந் தேதி மீனபரணி கொடைவிழா நடக்கிறது.