பழனி முருகன் கோவில் 
ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: 26-ந்தேதி கொடியேற்றம்

பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி நடைபெறும்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதுதான்.

அவ்வகையில் இந்த வருடத்திற்கான திருவிழா வருகிற 26-ந்தேதி (26.3.2026) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் வாகன வீதியுலா நடைபெறும். வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, வெள்ளியானை, தங்க குதிரை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 31-ந்தேதி நடைபெறும். அன்றைய தினம் இரவு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணி அளவில் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4.20 மணி அளவில் நடைபெறும். ஏப்ரல் 4-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம், நாதஸ்வர கச்சேரி, வீணை இன்னிசை, பொம்மலாட்டம், தேவராட்டம், சாக்ஷபோன் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

திருவிழா நடைபெறும் மார்ச் 30-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-ந்தேதி மட்டும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெற உள்ளது.

Also read:மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை