தெப்ப உற்சவம் 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம்.. ‘ரங்கா, ரங்கா’ முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

தெப்ப உற்சவத்திற்குப் பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு நம்பெருமாள் உபய நாச்சியாருடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் பிற்பகல் 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார்.

இரவு 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ரங்கா ரங்கா’ என்று பக்தி முழக்கம் எழுப்பியபடி பகவானை தரிசனம் செய்தனர்.

தெப்ப உற்சவத்திற்குப் பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். வருகிற 27-ந் தேதி பந்தக்காட்சியுடன் விழா நிறைவடைகிறது.