பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் முடித்த பின்பு, அங்குள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
கோவிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் கிடைக்கும் பணம், பொருட்கள் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் ரூ.3 கோடியே 47 லட்சத்து 77 ஆயிரத்து 367 கிடைத்தது. இதுதவிர 440 கிராம் தங்கம், 10 கிலோ 593 கிராம் வெள்ளி பொருட்களும், 1,067 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்தது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 387-ம், தங்கம் 125 கிராம், வெள்ளி 14 கிலோ 672 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 257-ம் கிடைத்தது. இதன்மூலம் 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மொத்தம் ரூ.5 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 752 கிடைத்தது. தங்கம் 565 கிராம், வெள்ளி 25 கிலோ 265 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1,324-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.