பூந்தமல்லி,
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், பொன்னி அம்மன் கோவில், 1-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் பிரபு(வயது 35). இவர், சலவை எந்திரங்களை சர்வீஸ் செய்யும் டீலராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவருடைய மனைவி தனது குழந்தைகளுடன் நேற்று காலை திருத்துறைபூண்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பிரபு வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
அவரது வீட்டில் வேலை செய்யும் உமா என்ற பெண், சாவியை எடுத்து வீட்டு வேலைகளை செய்தார். பின்னர் சாவியை மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.
மதியம் வீட்டுக்கு வந்த பிரபு, வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததுடன், வெளியே நிறுத்தி இருந்த மொபட் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபு வீட்டு சாவியை வழக்கமாக ஒரே இடத்தில் வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் மொபட்டை திருடிச் சென்றார்களா? அல்லது அவரது வீட்டில் வேலை செய்யும் பெண்ணே அவற்றை திருடிவிட்டு நாடகம் ஆடுகிறாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.