மும்பை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மும்பை அருகே உள்ள வசாய், விரார் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவர்களில் பலர் குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில் வேலை இழந்த தொழிலாளர்கள் 7 பேர் சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு நடந்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி பிலாட் பகுதியில் உள்ள மராட்டியம் - குஜராத் எல்லையில் குஜராத் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து அவர்கள் வேறுவழியின்றி வசாய்க்கு திரும்பினர். நேற்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில், விரார் பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி, தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் கல்பேஷ் ஜோஷி (வயது 32), மயங்க் பாட் (34) உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த மற்ற 3 பேருக்கு விராரில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
லாரி மோதி சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்றவர்களை போலீசார் திருப்பி அனுப்பியபோது 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.