புதுச்சேரி,
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி கந்தவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனே நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
1.1.2019 தேதியை வாக்காளர் தகுதிபெறும் நாளாக வைத்து தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்கள் கடந்த 31.1.2019 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9,59,785 (ஆண்கள்-4,53,362, பெண்கள்-5,06,330, மூன்றாம் பாலினம்-93) இதில் 219 சர்வீஸ் வாக்காளர்களும், 231 வெளிநாட்டு வாழ் இந்திய வாக்காளர்களும் அடங்குவர்.
நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவோர் வி.வி.பி.நகரில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்படி புதுவை மாநிலத்தில் மொத்தம் 970 வாக்குச்சாவடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 5 ஆயிரம் அரசு ஊழியர் களும், புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த 3,718 காவல் துறையினரும் ஈடுபடுவார்கள். கூடுதல் பாதுகாப்புக்காக மத்திய படையினரும் வருகை தருவார்கள்.
அனைத்து சர்வீஸ் வாக்காளர்களும் மின்னணு முறை வாக்குச்சீட்டு மூலமாக வாக்களிப்பார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணிசான்றை பயன்படுத்தி வாக்களிப்பார்கள்.
தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி 1950-க்கு புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தொலைபேசி எண்ணை புகார்களுக்கு மட்டுமின்றி தேர்தல் விவரங்களை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தலாம். மாவட்ட தொடர்பு மையங்கள் அந்தந்த மாவட்ட துணை தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் கண்காணிப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.