பாபநாசம்,
பாபநாசம் அருகே நல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கோபி(வயது36). தச்சுத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இவர் நாய் வளர்த்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் குடும்பத்தினருடன் அமர்ந்து கோபி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது நாய் வீட்டுக்குள் வந்தது. இதை பார்த்தவுடன் சாப்பிடும் நேரத்தில் நாய் வீட்டிடுக்குள் வந்து இருக்கிறதே என்று வீட்டில் இருந்தவர்கள் கோபியிடம் சத்தம் போட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை கையால் உடைத்தார். மேலும் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்திக் கொண்டார்.
விசாரணை
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோபியை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும்வழியிலேயே கோபி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.