கரூர்,
கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் வாகனங்களால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்து, சேலம் புறவழிச்சாலை வரை விரைவில் அணுகுசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தள ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அணுகு சாலை அமைய உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் அதற்கான வரை படங்களை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கரூர் மற்றும் வெளியூருக்கு செல்கின்றனர். இதனால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து ராமகிருஷ்ணபுரம், இனாம்கரூர் வழியாக சேலம் புறவழிச்சாலைக்கு அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான தளஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அரசுக்கு விரைவில் கருத்துரு அனுப்பப்பட்டு விரைவில் சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குகை வழிப்பாதை
பின்னர் அவர் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து இனாம் கரூர் வழியாக சேலம் புறவழிச்சாலைக்கு செல்லும் குகை வழிப்பாதை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து குளத்துப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியின் கட்டுமானப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சருடன் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையர் அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில், நில அளவை உதவி இயக்குனர் ரவீந்திரன், ஆய்வாளர் தனபால், தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச்செல்வன் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.