விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தை அடுத்த வன்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி காளியம்மாள். இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உண்டு. மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் ஆனந்தி (வயது 16). இவர் நாகலாபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி கூலி வேலைக்கு சென்றனர். ஆனந்தி பள்ளிக்கூடத்துக்கு சென் றார். அவர் வகுப்பறையில் செல்போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஆசிரியர், ஆனந்தியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு, அவரிடம் மறுநாள் பெற்றோரை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வருமாறு கூறினார். மேலும் ஆசிரியர், இதுகுறித்து ஆனந்தியின் தாயார் காளியம்மாளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அப்போது காளியம்மாள் தன்னுடைய மகளிடம் செல்போனை கொடுக்க வேண்டாம் என்றும், மறுநாள் நான் நேரில் வந்து செல்போனை வாங்கி கொள்வதாகவும் கூறினார்.
பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஆனந்தி தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர் தங்களுடைய மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த ஆனந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூடத்தில் செல்போனை பயன்படுத்தியதை ஆசிரியர் கண்டித்ததால், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.