ராமநாதபுரம்,
பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக மதுரையை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய வேனில் சென்றனர். அதில் 2 பாதுகாவலர்கள், டிரைவர், பொறுப்பாளர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பிவிட்டு 5-வதாக மற்றொரு ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக முதுகுளத்தூர் சென்றனர். அந்த வேனின் லாக்கரில் ரூ.1 கோடியே 20 லட்சம் இருந்தது. கடலாடி அருகே உள்ள மலட்டாறு முக்குரோட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் சென்றபோது, பணம் ஏற்றி சென்ற வாகனம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
வாகனம் விபத்தில் சிக்கியது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராமநாதபுரத்தை சேர்ந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். மேலும் சாயல்குடி போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது வேனில் கொண்டு வந்த லாக்கரில் ரூ.20 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.1 கோடி மாயமானது தெரியவந்தது.